"வருவாய்த் துறையினரின் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய அரசு சேவைகள் முடக்கம்" - ஜவாஹிருல்லா கோரிக்கை!!
வருவாய்த் துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய அரசு சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ச ம உ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மாநிலம் முழுவதும் அரசின் சேவைகளைப் பொதுமக்கள் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சான்றிதழ்கள்,குடிமைப் பொருள்கள் தொடர்பான சேவைகள் போன்ற பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளன.
எதிர்வரும் மார்ச் 12 ஆம் நாள் முதல் துவங்க இருக்கும் ரமளான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு அரசால் வழங்கப்படும் அரிசியை உரிய கட்டணம் செலுத்திப் பெறுவதற்கான சரியான வழிகாட்டுதல்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, வருவாய்த் துறை ஊழியர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து வேலை நிறுத்தத்தை விரைந்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.