இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..! சென்னையில் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்..!
வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களும் தங்களின் பெயர்களைச் சேர்க்க வசதியாக, வரும் ஜனவரி 24 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி 25 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
பெயர் சேர்க்க (படிவம் 6): 18 வயது நிரம்பிய (01.01.2026 அன்று) தகுதியுள்ள நபர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் 'படிவம் 6'-ஐ உறுதிமொழிப் படிவத்துடன் சமர்ப்பித்துத் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.
பெயர் நீக்க (படிவம் 7): ஏற்கனவே உள்ள பெயர்களை நீக்கவோ அல்லது பெயர் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ 'படிவம் 7'-ஐப் பயன்படுத்தலாம்.
திருத்தங்கள் செய்ய (படிவம் 8): முகவரி மாற்றம், பெயர் அல்லது புகைப்படம் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை மாற்றம் மற்றும் மாற்றுத்திறனாளி என வாக்காளர் பட்டியலில் குறிப்பிட விரும்புவோர் 'படிவம் 8'-ஐப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் 'சிறப்பு தீவிர திருத்தப் பணியின்' கீழ், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது 'Voter Helpline' செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.


