"ராமேஸ்வரம் மீனவர்களை உனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
இராமேஸ்வரம் மீனவர்களை உனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவையொட்டிய இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துகொண்டு இருந்த இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சமீபகாலமாக இலங்கை கடற்படையினாரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது மிகவும் வருந்ததக்கது. இச்செயல் மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் என்று இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இனிமேலும் தாமதிக்காமல் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்புடன், அச்சமில்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள, அமைதியாக சூழ்நிலை நிலவ, உரிய முயற்சியை மேற்கொள்ளவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இந்நிலையில் மீனவர்கள் நலனில் அக்கரையோடு, மத்திய அரசு வெளியுறவுத் துறையின் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுப்படவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.