ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு..! மொழியுரிமை மீதான தாக்குதல் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

 
su venkatesan su venkatesan

தெற்கு ரயில்வே இளநிலை பொறியாலர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி  வலியுறுத்தியுள்ளார்.  

தெற்கு  ரயில்வே இளநிலை பொறியாளர் பதவி  உயர்வுத் தேர்வில்  தமிழ் கேள்விகள் இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தொடரும் மொழியுரிமை மீதான தாக்குதல் ! தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது.நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து , தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்து ! 

தெற்கு ரயில்வே

ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.  ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. 

இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.