VinFast மின்சார கார் ஆலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள VinFast மின்சார கார் ஆலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் விற்பனையையும் தொடங்கிவைத்தார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த ‘வின்ஃபாஸ்ட்’ நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் பரப்பளவில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
அதன்படி முதல்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கரில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிடவை இடம்பெற்றுள்ளன. இத்தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எஃப் - 7 மற்றும் வி.எஃப்-7 ஆகிய 2 வகை கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்நிலையில் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவருக்கு , அங்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
வின்ஃபாஸ்ட் ஆலைக்குச் சென்று ஆலையை திறந்து வைத்த முதலமைச்சர், முதல் மின்சார கார் விற்பனையையும் தொடங்கி வைத்தார். மின்சார காரில் கையொப்பமிட்ட அவர், கனிமொழி எம்.பியுடன் சேர்ந்து அந்தக்காரில் பயணம் மேற்கொண்டார்.


