CPI மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நல்லக்கண்ணு. 100 வயதை கடந்த இவர் கடந்த 22 ஆம் தேதி தனது வீட்டில் இருந்தபோது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து உடனடியாக அவர் சென்னையில் நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு நல்லக்கண்ணு தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முன்னதாக நேற்று நலம் விசாரித்துச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டறிந்த அவர், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லல்கண்ணு விரைவில் நலம் பெற விழைகிறேன்” என்று முதல்வர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


