ஓசூரில் டைடல் பார்க்- டெண்டர் கோரியது தமிழக அரசு
ஓசூரில் 300 கோடியில் 5.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தொழில் துறை டெண்டர் கோரி உள்ளது.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், உயர்தர அலுவலக வசதிகளுடன் ஓசூரில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தொழில் துறை டெண்டர் கோரி உள்ளது. ஓசூர் எல்லைக்கு உட்பட்ட அந்திவாடி மைதானத்தின் அருகில் 9.2 ஏக்கர் நிலத்தில் 5.50 சதுர அடி பரப்பளவில் இந்த பூங்கா அமைய உள்ளது. தரைத்தளம் மற்றும் 9 தளங்களுடன் 300 கோடி செலவில் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தரைத்தளத்தில் வரவேற்பு அறை மற்றும் வணிக நிறுவனங்கள், முதல் தளத்தில் உடற்பயிற்சி கூடம் மாநாட்டு கூடம் உணவு கூடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. 3ம் தளம் முதல் 9ம் தளம் வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உயர்தர அலுவலக வசதிகள் அமைய உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


