ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வழக்கு - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

 
supreme court

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுதும் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் ஆர்.எஸ்.எஸ். மனு அளித்த நிலையில், ஆனால் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால், சட்டம்- - ஒழுங்கு பிரச்னையை காட்டி அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது .வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் இருக்கும் உள்ளரங்கு நிகழ்வாக, அணிவகுப்பை நடத்தலாம் என்ற, நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்தது. அதில், தமிழகத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்கு நிகழ்வாக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை நடத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ததோடு, அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து போலீஸ் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

rss class

இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில்தான், தமிழ்நாடு காவல்துறையானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுத்ததாகவும், அதனை கண்டுகொள்ளாமல் அரசின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் வந்துள்ளது எனவும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.