ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்: எல். முருகன்

 
L.Murugan

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

It's usual: MoS L Murugan on students' suicides


ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் முயற்சியை அனைவரும் கையில் எடுக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி பிரதமரே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார்.  இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் அருகில் உள்ள அனுமார் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த எல். முருகன் கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டார். கோவிலில் வேட்டியை மடித்துக்கெட்டி குப்பைகளை அகற்றியதோடு, கோவில் பீடங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன், “அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதே ஒவ்வொரு இந்தியனின் கனவு. இது இந்தியர்களின் உணர்வுப்பூர்வமான தருணம். ஊடக வெளிச்சத்திற்காக பாஜகவினர் கோவில்களை சுத்தம் செய்யவில்லை. கோவில்கள் எவ்வளவு அழுக்காக, குப்பைகளாக உள்ளது என்பதை நான் தூய்மைப்பணி மேற்கொள்ளும் போது தெரிந்திருக்கும். கோவில்கள் அழுக்காகவும் குப்பைகளாகவே உள்ளன.

ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அது அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் விருப்பத்தை அறிந்து அரசு நிறைவேற்ற வேண்டும். 22ம் தேதி தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழா பூஜை நடத்த அரசு அனுமதிக்கவில்லை என செய்தி வெளியாகி உள்ளது. கடும் கண்டனத்திற்குரியது. எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை தீபாவளி போல நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். திமுக ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே செய்கிறது. தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறப்பையொட்டி சிறப்பு பூஜை செய்ய அனுமதி மறுத்திருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அதனை அறநிலையத்துறை அமைச்சர் வாபஸ் பெற வேண்டும்” என்றார்.