புதிய கட்டிடம் முடியும் முன்னரே மின் இணைப்பு பெறலாம் - தமிழ்நாடு அரசு

 
தமிழக அரசு

 கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு போன்றவற்றை வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர், அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20 இன் படி கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்றுகள் இன்றி மின் இணைப்பு, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளிட்ட முதலான இணைப்புகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கட்டுமான பணி

தற்போது கட்டட முடிவு சான்றிதழ்கள் பெறுவதற்கு முன்னதாகவே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என்கிற நகராட்சி நிர்வாகத்தின் உத்தரவுப்படி,  12 மீட்டர் உயரமுள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர்(8,070 சதுர அடி) பரப்பளவிற்கு உள்பட்ட அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கலாம்.  இதுபோன்று  அனைத்து தொழிற்சாலைகளுக்கும்  மின்சார, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.