தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 20-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம்சாட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். என்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு வாசித்த கவர்னரின் தமிழ் உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
இடைக்கால பட்ஜெட்...
அத்துடன் அப்போதைய கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூட இருக்கிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் குறித்த தகவல்கள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முன்னால் உள்ள சிறிய கணினியான டேப்-ல் பார்த்து தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்....
வழக்கமாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், ஒரு நிதியாண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த முறை சட்டசபை தேர்தல் வருவதால், குறுகிய கால செலவுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்றால், தேர்தலை மனதில் வைத்து அதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக மக்கள் ஆர்வம்...
அதாவது, சிறுபான்மையினர் மக்களையும், இளைஞர்களையும் கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. அதனால், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெறப்போகிறது? என்பதை தெரிந்துகொள்ள தமிழக மக்கள் இப்போதே ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

