தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் - தமிழக அரசு..
தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என் சுப்பையன், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அதன்படி இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தனி இணையதளம் உருவாக்கப்படும் எனவும், தினமும் இறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

எப்படி முட்டை விலை மற்றும் பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இனி ஆடு, மாடு, கோழி இறைச்சிகளின் விலையையும் நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை? இறைச்சி என்ன விலை? என இணையதளத்தில் தினசரி அப்டேட் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பதற்கு தமிழ்நாடு அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு ஆட்டிறைச்சி மற்றும் கால்நடைகள் விற்கப்படுவது தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


