‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை தொடங்கியது..!! ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாகச் சென்ற முதல்வர் ஸ்டாலின்..

 
MKstalin ttn MKstalin ttn


சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் பரப்புரை செய்து வருகிறார்.  

 மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பரப்புரையின்  கீழ் திமுகவில்  புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என  அறிவித்திருந்தார். அதன்படி ஜூலை 1ம் தேதி  அண்ணா அறிவாலயத்தில்  ‘ஓரணியின் தமிழ்நாடு’உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு கடந்த 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் பயிற்சி பெற்றுக்கொண்டனர்.  

ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய், நம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைவார்கள். இந்தப் பரப்புரை மூலம், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து 100% குடும்பங்களையும் நேரில் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுப்பர்! இதன் மூலம் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொருநகரத்திலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% மக்களைத் திமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்வதே இலக்கு என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Oraniyil Tamilnadu

இந்த திட்டத்தின் படி,  45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2 கோடி  100% குடும்பங்களையும் சந்தித்து 1 கோடி குடும்பங்களையும்,  2 கோடி உறுப்பினர்களை திமுகவில் உறுப்பினர்களாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள  68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக பதிவு செய்தல் வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது., 45 நாட்களுக்குப் பிறகு  ஆகஸ்ட் 15ம் தேதி  ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையின் நிறைவு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று  ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை திமுகவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் மக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கிவைத்தார்.  வீடு வீடாகச் சென்று திமுகவில் இணையுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல் தமிழகம் மூழுவதும்  அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்து திமுகவில் உறுப்பினர்களை சேர்க்க உள்ளனர்.