ஒடிசா விரைந்தது தமிழக மருத்துவ குழு - தனி விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு

 
ஆறுதல் கூறி தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.. ஒடிசா  ரயில் விபத்து குறித்து சரத்குமார் இரங்கல்..

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்டு தனி விமானத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது.   10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன.  இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார். தமிழர்கள் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ மருத்துவ குழு ஒடிசா விரைந்துள்ளது. மேலும் அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை தனி விமான மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் சிக்கிய 55 தமிழர்களை முதலுதவி சிகிச்சைக்கு பின் விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.