தமிழ் புத்தாண்டு, ரம்ஜான்: சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி( வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அத்துடன் ஏப்ரல் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களிக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை காரணமாகவும், பண்டிகையை ஒட்டியும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டுவர். அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நாளை, வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதேபோ, ஏப்ரல் 21-ம் தேதி 200 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 500 பேருந்துகள் வீதம் இயக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.