“விஜய் சொல்ற மாதிரி புத்தகமல்ல... திமுகவின் ஊழலை வைத்து திரைப்படமே எடுக்கலாம்”- தமிழிசை

திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான் புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் துணை ஆலயமான சாலிகிராமத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திருகுடமுழக்கு நன்னீராட்டு விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிர்வாக துணைத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பக்தர்களோடு பக்தர்களாக கலந்து கொண்டு ஆதிபராசக்தி சித்தர் பீட குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை கண்டு ஆதிபராசக்தி அம்மனையும் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.பெண்களை கருவறைக்குள் அனுப்பி பெரும் புரட்சியை செய்தவர் அம்மா. அதனால்தான் அம்மாவுக்கு பிரதமர் பத்மஸ்ரீ விருதை கொடுத்து கௌரவித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் காமாலை கண்கள் உடையவர்கள் என அமைச்சர் சேகர்பாபு விமர்சிக்கிறார். எந்த காமாலை கண்ணோடு மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார்கள் என நானும் கேள்வி எழுப்ப முடியும். ரூ போட்ட பட்ஜெட்டுக்கொல்லாம் ஓ போட்டு வியப்பில் வாழ்த்த முடியாது. நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது. திமுகவின் ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான். நிச்சயமாக புத்தகமல்ல திமுகவின் ஊழலை வைத்து திரைப்படமே எடுக்கலாம்” எனக் கூறினார்.