தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் நடக்கிறது - தமிழிசை ஆதங்கம்!

 
Tamilisai Tamilisai

தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே இங்கு அரசியல் நடக்கிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கிய நிலையில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய அவர் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார். தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார். புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும்.  பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான். இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். இவ்வாறு கூறினார்.