வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ!
தமிழக சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்துள்ளது. இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும். பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


