முதலமைச்சரின் மகனும், மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்தி வருகிறார்கள் - அண்ணாமலை

 
annamalai mkstalin

முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆற்று மணல் அள்ள பத்து ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கியது. முன்பெல்லாம் ஆற்றின் கரையில் மணல் எடுப்பார்கள். திமுக ஆட்சியில், ஆற்றினுள் மணல் திருடுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், கனிம வளங்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், தமிழகம் முழுவதும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதையே முழு வேலையாகச் செய்கிறார்கள். முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிச் சீருடைகள், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் எல்லாம் தமிழக நெசவாளப் பெருமக்களிடம் கொள்முதல் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறிய திமுக, தனியார் நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அவர்களிடம் கொள்முதல் செய்கிறார்கள். இலவச வேட்டி சேலை கொள்முதல் 600 கோடி ரூபாயில் 88 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. தமிழக நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன், திமுகவின் ஊழல் கஜானாவிற்குப் போகிறது. ஊழல் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஜவுளித் துறையின் அமைச்சர் பெயர் காந்தி. எந்த பெயரை யாருக்கு வைத்திருக்கிறார்கள்?

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி, சாமானியர்களுக்கான ஆட்சி. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக, ஏழை எளிய மக்களுக்கு வீடுகளோ, கழிப்பறை வசதியோ, குடி நீர் வசதியோ, தொழில் தொடங்கக் கடன் உதவியோ பற்றி அப்போதைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு சிந்தித்ததே இல்லை. ஆனால், எளிய பின்னணியில் இருந்து வந்த நமது பிரதமர் மோடி அவர்கள், எளிய மக்களைப் பற்றிச் சிந்தித்தார். அவர்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் உருவாக்கினார். தற்போது, பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கானோருக்கு வீடு கிடைத்துள்ளது. குழாய் குடிநீர் வீட்டுக்கே வருகிறது. கழிப்பறை வசதி இல்லாமல் இருந்த பல கோடி மக்கள் இன்று கழிப்பறை வசதி பெற்றுள்ளனர். முத்ரா கடன் திட்டம் மூலம், பல கோடி இளைஞர்கள் இன்று தொழில்முனைவோர்களாக முன்னேறியிருக்கின்றனர். பல கோடி மக்களுக்கு, புகையற்ற சமையலுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த ஒவ்வொரு திட்டங்களிலும் பல லட்சம் மக்கள் பலன் பெற்றுள்ளனர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின், "பிரதமர் தமிழகத்துக்கு என்ன செய்தார் ?" என்று கேட்கிறார். பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் எட்டு மத்திய அமைச்சர்களை வைத்துக் கொண்டு திமுக என்ன செய்தது? ஊழல் செய்வதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருந்தது திமுக. பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் நடந்த ஊழல் மட்டுமே 12 லட்சம் கோடி. 2ஜி ஊழல், கப்பல் போக்குவரத்துத் துறையில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல் என ஊழலில் திளைத்த திமுகவுக்கு, மக்கள் தற்போது நேரடியாகப் பலன்களைப் பெறுவதால், ஊழல் செய்ய முடியவில்லையே என்ற கோபம் மட்டும் தான் பிரதமர் மீது. 


மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீதோ, அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் மீதோ ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட கூற முடியாது. நேர்மை என்பதன் இலக்கணமாக ஒன்பதாண்டு கால மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத அளவில் சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆளுநர் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. ஆனால், திமுக அரசு, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று காவல்துறையினரை வைத்துப் பேச வைக்கிறது. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. ஒட்டு மொத்த காவல்துறையும் உளவுத் துறையும் தோல்வியடைந்துள்ளது. கம்பீரமான தமிழக காவல்துறையை, இன்று திமுக சிதைத்து வைத்திருக்கிறது. கடுமையான குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைக் கண்டுகொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தமிழக பாஜவினரைக் கைது செய்வதிலேயே முனைப்பாக இருக்கிறது. நமது தமிழக காவல்துறையினரை, கைப்பாவை போல நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. தன் மகனுக்கு ஒரே ஆண்டில் அமைச்சராகப் பதவி உயர்வு கொடுத்த முதலமைச்சர், தனது துறையினரான காவல்துறையினரை இதுவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அவர்களுக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. காவல்துறையினர், ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்துக்கு அஞ்சாமல், மக்களுக்காக பணி செய்ய வேண்டும்.  அதுதான் அவர்களது கடமை.

கடந்த பத்து ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில், நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது. உலக அரங்கில் தலை நிமிர்ந்து இருக்கிறது. கடந்த 23 ஆண்டுகளாக, குஜராத் முதல்வராக, பிரதமராக தொடர்ந்து அரசுப் பதவியில் இருக்கும் நமது பிரதமர், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்கிறார்.  ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஜப்பானுக்கும் துபாய்க்கும் குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா செல்கிறார். தமிழகத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார்கள் என்று நிதியமைச்சரே கூறும் அளவுக்கு ஊழல் ஆட்சி நடக்கிறது. தமிழக அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் புகார் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஊழல் செய்து, தமிழகத்தைக் கடன்கார மாநிலமாக மாற்றி இருக்கிறது. பிறந்த குழந்தை மீது கூட ரூபாய் மூன்றரை லட்சம் கடன் சுமையைச் சுமத்தியிருப்பது தான் எழுபதாண்டு கால திராவிட மாடல் அரசு.  வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக அரசுக்குப் பாடம் புகட்டுவோம். எளிய மக்களுக்காக ஆட்சி நடத்தும் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க தேர்ந்தெடுத்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.