ஏப்ரல் 14-ம் தேதி திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் - அண்ணாமலை பேட்டி

 
Annamalai

அதிமுக-பாஜக கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என நான் கூறியதில்லை. அதிமுக பாஜக கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல. கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே தொகுதிகள் குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. 2024,2026 ஆண்டு தேர்தல் குறித்து 2 மணி நேரம் அமித்ஷாவிடம் பேசினேன். 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். இப்போதைய நிலையில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை குறித்து பேசுவது சரியல்ல. 

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் நான் பேசி வருகிறேன்.தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இப்போது செல்லும் பாதை 20 ஆண்டுகளுக்கு பிறகு சரியாக இருக்காது. நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தூய்மையான அரசியலை பார்ப்பீர்கள். வானதி சீனிவாசனும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதி திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாலும் அதில் எந்த பயனும் இல்லை. இவ்வாறு கூறினார்.