திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை - அண்ணாமலை

 
Annamalai

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

திமுக அரசின் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டு காலத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாதை கண்டித்து, மேததாது அணை விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், விலை வாசி உயர்வு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் காரப்பாக்கம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பிதான் தமிழக அரசு செயல்படுகிறது என கூறினார். தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அது இன்னும் உறுதியாகவில்லை என கூறினார். மேலும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர் என கூறினார்.