குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது உண்மையானால் மறுதேர்வு நடத்த வேண்டும் - அண்ணாமலை

 
Annamalai

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். 
 
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.   அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.