செங்கோல் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான அஸ்திவாரம் - அண்ணாமலை பேச்சு!

 
Annamalai

நாடாளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை, தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

மதுரை அண்ணாநகரில் 9 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:  தமிழை வளர்க்க மோடி பாடுபடுகிறார். தமிழின் பெருமை, தமிழனின் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். ஐ.நா. சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி, திருக்குறளின் பெருமையை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துரைத்தார். வாரணாசியில், காசி தமிழ் சங்கம் வளர்த்தார். செங்கோலின் பெருமையை நாடாளுமன்றத்தில் நிலை நாட்டினார். புதிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். நாடாளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ, இனி தமிழகத்திலும் அறம் சார்ந்த ஆட்சிதான் அமையப்போகிறது.  தற்போது இருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும், அறம் என்ற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாடாளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை, தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது.  

எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை போல ஊழலில் ஈடுபடவில்லை. ஆனால், 2 ஆண்டுகளே ஆட்சி நடத்திய தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 22 குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன.  தமிழகம் கள்ளச்சாராய மாநிலமாக மாறிவிட்டது. இதற்கு தி.மு.க.தான் காரணம். ரூ.44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வழியாக வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகத்தை தி.மு.க. மாற்றி இருக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவ்வாறு  கூறினார்.