திருச்சியில் ரோந்து பணியின் போது உயிரிழந்த தலைமை காவலர் - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

 
stalin

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலைமைக் காவலர் திரு.ஸ்ரீதர் உயிரிழந்திருப்பது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும். தலைமைக் காவலர் திரு. ஸ்ரீதர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.