சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் - அமித் ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்

 
stalin

சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.  மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன, இருப்பினும் தேர்வில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. 

தமிழ்நாட்டில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது. எனவே சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.