நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் திமுக அரசு அனுமதி அளிக்காது - முதலமைச்சர் உறுதி

 
mk stalin

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நிலக்கரி எடுப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.காமராஜ் கூறினார்.  மத்திய அரசின் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கூறினார்.  நிலக்கரி சுரங்கம் அமைக்கும் டெண்டரை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தை பற்றி அறிந்தவுடன் நான் அதிர்ச்சிக்குள்ளானேன். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். எனது கடிதத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளார். புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது. நானும் டெல்டா மாவட்ட பகுதியை சேர்ந்தவந்தான். எந்த காரணத்தை கொண்டும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. நிச்சயம் உறுதியாக இருப்பேன். மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அனுமதி அளிக்காது, அளிக்காது. இவ்வாறு கூறினார்.