‘தமிழ்நாடு தினம்’... போராட்ட வரலாறும், சர்ச்சை பின்னணியும்!
1938 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என பெரியார் முழக்கமிட்டார். இதனையடுத்து 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக்கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக 1957 ஆம் ஆண்டு மே 7- ஆம் தேதி சட்டசபையில் திமுக கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை சோசலிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரை சட்டசபையில் கொண்டுவந்தார்.
அதனை காங்கிரஸ் அரசு ஒத்திவைக்கவே, திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. அதே ஆண்டே மேற்குவங்க சிபிஐ எம்பி பூபேஷ் குப்தா தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரும் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டுவந்தார். அப்போது வரலாற்று தரவுகளை மேற்கோள் காட்டி அண்ணா அதரித்து பேசியும் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. மீண்டும் 1963 ஆம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ இராம அரங்கண்ணல் 1963 ம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி கொண்டுவந்த தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
திமுக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்ததும், 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற அரசியல் சட்டத்திருத்த தீர்மானம் கொண்டுவந்து, அதனை நிறைவேற்றினார். 1967ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18- ஆம் நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டார்.
மெட்ராஸ் ஸ்டேட் என்ற தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதாவது தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட புதிய மாநிலம் பிறந்த நாள் நவம்பர் 1-ஆம் தேதி. அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி. இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாள் தான் 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி. ஒரு மாநிலம் பிறந்த நாளைத் தான் அம்மாநில நாளாக கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாக கொண்டாட முடியாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை மாநில தினமாக கொண்டாட முடிவு செய்து கடந்த 2019ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு தினம் என சிலர் கூறிவருவது குறிப்பிடதக்கது.