"முடிவில் மாற்றமில்லை; இருமொழி கொள்கை தான்" - தமிழக அரசு கறார்!
எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் சரி ஆளுங்கட்சியாக வந்தபோதிலும் சரி மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக எதிராகவே இருந்துவருகிறது. இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருவரும் அடிக்கடி உறுதிப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கென புதிய கல்விக்கொள்கையை உருவாக்கப் போவதாகும் கூறியுள்ளனர். 3ஆவது மொழியை படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அது விருப்பப் பாடமாக இருக்க வேண்டும். அது கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் பண்டாரி அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், "தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு தான். இருப்பினும், மாணவர்கள் ஒருமொழியை கூடுதலாக தெரிந்துகொள்வது நல்லது தான்.
தமிழகத்தை தவிர பல்வேறு மாநிலங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளன. அதேபோல், இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் அரசு அமல்படுத்தக்கூடாது?” என அடுக்கடுக்கான கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "தமிழகத்தில் இந்தியை கற்றுக் கொள்ள யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், இருமொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தான் தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்துள்ளது” என்றார்.