"வீதிநாடக, திரைக்கலைஞர் பூ ராமு மறைவு" - தமுஎகச மாநிலக்குழு இரங்கல்!!

 
tn

வீதிநாடக, திரைக்கலைஞர் கருப்பு ராமு மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமுஎகச மாநிலக்குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், வீதி நாடக மற்றும் திரைக்கலைஞருமான தோழர் வ.இராமு அவர்கள் 27.06.2022 அன்று மாலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது மறைவிற்கு தமுஎகச மாநிலக்குழு நெஞ்சார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. மாணவப்பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வழியே பொதுவாழ்க்கைக்கு வந்த ராமு, இறுதிவரை  இடதுசாரியாக வாழ்வை மேற்கொண்டவர்.  சாதி மறுப்பும் சடங்கு மறுப்பும் சொந்தவாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும்விதமாக தன் பெற்றோரின் இசைவுடன் காதல் மணம் புரிந்தவர்.  

ramu

தென்சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டியமைக்கவும், அப்பகுதியின் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக சைதை கலை இரவினை வடிவமைக்கவும் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். “கனவுகள் 2000” என்ற தலைப்பில் புத்தாயிரமாவது ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ்வினை வெற்றிகரமாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியம் அமைவதற்கு அடிகோலிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைச் சங்கமத்தை முன்னின்று நடத்தியவர்.

tn
 
1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சென்னை கலைக்குழுவில் இணைந்திருந்த ராமு அக்குழுவினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிலும் கவனம்பெறத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்தார். குறிப்பாக, பயணம் நாடகத்தில் அவர் ஏற்று நடித்த “நகரதேவன்” பாத்திரம் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியாய் இருந்தது.  இயக்குநர் சசியின் ‘பூ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி ‘பூ ராமு’வாகியவர்  பரியேறும் பெருமாள், கர்ணன், நெடுநல்வாடை உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனி இடம் பிடித்தவர். 

tn
 
 ஆட்டோ ராமு, பூ ராமு, கருப்பு ராமு என நமக்குள் நிறைந்திருக்கும் தோழர் ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப்பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர் யாவரது துயரிலும் தமுஎகச மாநிலக்குழு பங்கெடுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.