புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - டிஜிபி வேண்டுகோள்

 
Shankar Jiwal

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன். காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்களது உத்தரவின் படி 3112.2023 அன்று இரவு முதல் 01.01.2024 காலை வரை தமிழ்நாடு முழவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், சாலை விபத்துக்கள் மற்றும் இதர அசம்பாவிதங்களை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படவுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், அதிக சத்தத்துடன் வாகனம் ஓட்டுவோர் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி பெற்றவர்கள் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நேர அளவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் கூடும் இடங்கள். கேளிக்கை விடுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள் கடை வீதிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்தல் ஆகிய பணிகளில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.