கலாஷேத்ரா பேராசிரியர் தலைமறைவு - கேரளா விரைந்தது தனிப்படை

 
kalashetra

பாலியல் புகாருக்கு ஆளான கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடுவதற்காக தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.  மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.  இந்த விவகாரம் தொடர்பாக,  மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை நாளை அவர் அரசிடம் தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கிடையே  2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தார்.  அதன்பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ளார். கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்த அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், ஹரி பத்மனை தேடி தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் பேராசிரியர் ஹரி பத்மன் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஹரி பத்மனை தேடி தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.