"1 வாரம் கட்டாய வீட்டு தனிமை; ஆர்டிபிசிஆர் கட்டாயம்" - விமான நிலையங்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில், "வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களைத் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தற்போது தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நாடுகளில் இருந்தும், அங்கிருந்து இதர நாடுகள் வழியாக வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அதற்கான செலவை பயணிகளிடம் வசூலித்துக் கொள்ளலாம். பரிசோதனை முடிவு வரும்வரை, அவர்களை விமான நிலையத்திலேயே தங்கவைக்க வேண்டும்.
அவர்களுக்கு தொற்று இல்லை என்றாலும், 7 நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்த வேண்டும். 8-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால், அடுத்த 7 நாட்களுக்கு பயணிகள் தாங்களாகவே உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகளை, மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட பயணியை, தனி அறையில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். ஒவ்வொரு விமானத்திலும் 5 சதவீத பயணிகளுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கான செலவை, அந்தந்த விமான சேவை நிறுவனங்களே ஏற்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.