தஞ்சை ஆணவக்கொலை - மேலும் 3 பேர் கைது
பட்டுக்கோட்டை அருகே கலப்பு திருமணம் செய்த காரணத்திற்காக இளம்பெண் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா பக்கத்து ஊராட்சியான பூவாளுரை சேர்ந்த பாஸ்கரன் மகன் நவீனை காதலித்து வந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த நவீன் மாற்று சமூகத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து மணமக்கள் இருவரும் திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டியில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் கடந்த 2ம் தேதி பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் துன்புறுத்தி கொலை செய்து விட்டதாக தகவல் கிடைத்த நிலையில், காவல் நிலையத்தில் இது தொடர்பாக நவீன் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஐஸ்வர்யாவின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டையில் இளம்பெண் ஆவணக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாற்று சமூக இளைஞரை காதல் திருமணம் செய்ததாக இளம்பெண் ஐஸ்வர்யா கடந்த 8ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் ரோஜா, தந்தை பெருமாளுக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றம் நீதிமன்ற காவல் விதித்தது.
இந்நிலையில் தஞ்சை பட்டுக்கோட்டை ஆணவக்கொலை வழக்கில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே 5பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.