"மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னை" - தமிழக அரசுக்கு தினகரன் கண்டனம்!!

 
ttv

டாஸ்மாக் கடை மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tasmac

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , "திருநெல்வேலி மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மதுவாங்கும்போது தகராறில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து, டாஸ்மாக் விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான பால்துரை, உதவி விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான  பாலமுருகன் ஆகியோரை அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

TTV

படுகாயம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும்  பார்களுக்கு வரும் மது பிரியர்களால் ஆங்காங்கே இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்திருப்பதை திமுக அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்து வருவது ஏற்கதக்கதல்ல.மது விற்பனையை மட்டும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கும் விடியா அரசு, அதில் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

tn

இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சீர் செய்ய தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அதே நேரத்தில் படுகாயம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவரும் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.