மெட்ரோ ரயில் நிலைத்தில் பெண்ணுக்கு Flying kiss கொடுத்த டெய்லர் கைது
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு Flying kiss கொடுத்த 64 வயது டெய்லர் கைது செய்யப்பட்டார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 24 வயது இளம் பெண் அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் நின்ற முதியவர் ஒருவர், இளம் பெண்ணிடம் “எங்கே செல்கிறாய்” எனக் கேட்டுள்ளார். அவர் பதில் ஏதும் சொல்லாமல் நிற்கவே... முதியவர் பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார் என தெரிய வருகிறது.
இது தொடர்பாக இளம் பெண் காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த போதை முதியவர் சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார். அதே ரயிலில் ஏறிய இளம் பெண் அண்ணா நகர் டவர் பார்க் நிறுத்தத்தில், போதையில் இருந்த முதியவரை பிடித்து கீழே இறக்கியுள்ளார். பின்னர் அந்த இளம் பெண் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் முதியவருக்கு தர்மஅடி கொடுத்து அண்ணாநகர் ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட இடம் திருமங்கலம் என்பதால் திருமங்கலம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். திருமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருவொற்றியூரை சேர்ந்த கணேசன் (வயது 64) என்பதும் திருமங்கலத்தில் டெய்லராக பணியாற்றுவதும் தெரியவந்தது. அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ( பிரிவு 4), பி. என். எஸ்.79- சைகை அல்லது செயல் மூலம் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் மேல் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


