கிண்டல் செய்யுறாங்க; நான் அத பெருசா எடுத்துக்கல - சசிகலா
என் அரசியல் பயணம் தேவையற்றது என்று கிண்டல் செய்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. அதைப்பற்றி எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்கிறார் சசிகலா.
அதிமுகவில் தான் பொதுச் செயலாளராக ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அவர் தொண்டர்களின் ஆதரவைத் திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பொதுக்குழு களேபரம் நடக்கும்போது அமைதியாக இருக்கிறார் சசிகலா என்ற பேச்சு இருக்கும் நிலையில், நான் அமைதியாக இல்லை என்கிறார்.
விழுப்புரத்தில் அவர் தொண்டர்களை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘’ நான் தான் எப்போதும் அதிமுகவிற்கு பொதுச் செயலாளராக இருக்கிறேன். அதிமுக என்பது ஒரு தனி நபரின் வீடோ தனியார் அமைப்போ கிடையாது’’ என்று சொன்னவர், ’’ அதிமுக பொதுச் செயலாளராக யார் வரவேண்டும் என்பதை தனி நபர்கள் தீர்மானிக்க முடியாது. கட்சித் தொண்டர்கள் தான் அதை தீர்மானிக்க முடியும். தற்போது அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். துரோகிகளை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய சசிகலா, ’’வரும் 11ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது . நான்தான் கட்சியின் பொதுச் செயலாளர்’’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னார். ’’அடுத்த கட்டமாக அதிமுக தொண்டர்களை திரட்டி அதிமுகவின் தலைமை கழகத்திற்கு செல்வேன். அமைதியாக நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
என்னுடைய அரசியல் பயணம் தேவையற்றது என்று சிலர் கிண்டல் செய்வதாக சொல்கிறீர்கள். இதுபோன்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பேசுவதைப் பற்றி எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ’’என்று சொன்ன சசிகலா, ’’ நான் எப்போதுமே நியாயப்படி தான் செயல்படுவேன். நான் அமைதியாக இல்லை . நான் என்ன செய்ய வேண்டுமோ அதை தொடர்ந்து முறையாக செய்து கொண்டுதான் இருக்கிறேன். பிரிந்திருந்தாலும் என்னை பொறுத்த வரைக்கும் எல்லோரும் ஒன்று தான் என்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய முடிவு . எல்லோரும் என்ற பிள்ளைகள் தான்’’ என்கிறார்.
’’மக்களுக்கு பணியாற்றுகின்ற விஷயத்தில் ஜெயலலிதா என்னுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டே வந்தார். அவரின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றுகின்ற வகையில் தான் நான் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன்’’என்றார்.