தென்காசி சட்டமன்ற தொகுதி - இன்று மறு வாக்கு எண்ணிக்கை..

 
தென்காசி சட்டமன்ற தொகுதி - இன்று மறு வாக்கு எண்ணிக்கை


உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் மறு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.  

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.  அக்கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வ மோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் பழனி நாடார் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று  வெற்றி பெற்றார்.  இதனிடையே  இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும்  செல்வமோகந்தாஸ் பாண்டியன்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் ஓட்டுக்களை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.  

தபால் ஓட்டு

இதன் எதிரொலியாக இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில்  மறு வாக்கு  எண்ணிக்கை தொடங்கியது.  தேர்தல் அதிகாரியாக உதவி ஆட்சியர் லாவண்யா இருந்து இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்தி வருகிறார். வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் மட்டும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் காங்கிரஸ் சார்பில் பழனி நாடார் எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் சார்பில் மேலகரம் அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அரசு வக்கீலுமான கார்த்திக் குமார் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளனர்.  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.