தென்காசி : மறுவாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்..

 
தபால் ஓட்டு


தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வந்த தபால் ஓட்டுகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வ மோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் பழனி நாடார் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று  வெற்றி பெற்றார்.  இதனிடையே  இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், செல்வமோகன்தாஸ் பாண்டியன்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

தென்காசி

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் ஓட்டுக்களை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதன் எதிரொலியாக இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில்  மறு வாக்கு  எண்ணிக்கை தொடங்கியது.  உதவி ஆட்சியர் லாவண்யா இருந்து தேர்தல் அதிகாரியாக  வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார். தொகுதியில் பதிவான 2,589 வாக்குகளும்   எண்ணப்பட்டுவந்த நிலையில், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படிவம் 13, 13பி ஆகியவற்றை பரிசீலித்து சரிபார்த்த பிறகே படிவம் 13 சி எனப்படும் ஓட்டு சீட்டுகளை எண்ண வேண்டும் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வாக்குகள் எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.