அது மாநில அரசின் பிரச்சனை.. பரந்தூரில் பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் - மத்திய அமைச்சர்..

 
jyotiraditya scindia


பரந்தூரில்  பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் மத்திய பட்ஜெட் 2023 தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய  பட்ஜெட்டில் மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  8  ஆண்டுகளில் 73 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.  

பரந்தூர் விமான நிலையம்:  பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட  மக்கள் பேரணி.. 

3-வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டப்பட உள்ளது. 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும். அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும்”  என்று தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம்

முன்னதாக,  சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக மையம் மற்றும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடத்தை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக எம்.பிக்கள்  டி.ஆர்.பாலு கனிமொழி சோமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.