ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் இன்று மாலை நல்லடக்கம்

 
ops mother

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நலம் பாதித்து தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நேற்று இரவு அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமானது. வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனளிக்கவில்லை  இதனையடுத்து  மருத்துவமனையில் இருந்து அவரை பெரியகுளத்தில் உள்ள இல்லத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். இந்நிலையில், நேற்றிரவு 10.20 மணியளவில் அவர் காலமானார்.  பழனியம்மாள் இறப்பு குறித்து உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு வந்தார். இறந்த தாயாரின் உடலைப்பார்த்து அவர் கதறி அழுதார். 

இந்த நிலையில், பழனியம்மாள் நாச்சியாரின் உடல் இறுதி சடங்கு முடிவடைந்த பின்னர் இன்று மாலை 4.30 மணி அளவில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பழனியம்மாள் நாச்சியாரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும், பொதுமக்களும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.