சுற்றுலா வந்த இடத்தில் வழி தவறிய உ.பி மூதாட்டி! உறவினர்களுடன் சேர்த்த கடலூர் போலீசார்

 
மூதாட்டி

உத்தரப்பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்து வழி தவறி கடலூருக்குள் இறங்கிய மூதாட்டியை, அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாவின் போது வழி தவறிய உ.பி மூதாட்டி: உறவினர்களை தேடி கண்டுபிடித்து சேர்த்து வைத்த கடலூர் போலீசார்!

கடலூர் சில்வர் பீச் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்தார். சில்வர் பீச் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அந்த மூதாட்டியை மீட்டு விசாரித்தார். ஆனால் மொழி பிரச்சினையால் அவரிடம் சரிவர விசாரிக்க முடியவில்லை. அந்த மூதாட்டிக்கு ஹிந்தியும் பேச தெரியாத நிலையில் போஜ்புரி என்ற ஒரு மொழியை பேசினார். இதனால் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். 

இதையடுத்து அந்த மூதாட்டி, கடலூர் முதுநகர் முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். கடலூர் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் போஜ்புரி மொழி தெரிந்தவராக இருந்த காரணத்தினால் அவரை வைத்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர் காவல் அதிகாரிகள். இதையடுத்து பல்வேறு அதிகாரிகள் மூலம் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உத்தரபிரதேசம் மாநிலம் பன்வாரி பகுதியை சேர்ந்த குஷ்மரணி (வயது 74) என்பதும், ராமேஸ்வரத்திற்கு சென்றுவிட்டு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிய போது வழிதெரியாமல் கடலூரில் இறங்கியதும், செலவுக்கு பணம் ஏதும் இல்லாததால் கடலூரில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. 

மூதாட்டி

இதையடுத்து போலீசார், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உத்தரபிரதேசத்தில் இருந்து மூதாட்டியின் குடும்பத்தினர் இன்று கடலூர் வந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மூதாட்டியின் பயண செலவுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்ததுடன், அவரது குடும்பத்துடன் மூதாட்டியை சேர்த்து வைத்தார். அப்போது மூதாட்டியின் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸ் ஜீப்பில் மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.