தம்பி புனித் ராஜ்குமார் மரணம் என்பது கொடுந்துயரமானது - சீமான்

 
se

பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு  நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

pu

 கன்னடத் திரையுலகின் மிகப் புகழ் பெற்ற நடிகரான ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார்(46).   இவர் 29 படங்களில் நடித்து கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர்.   நடிகர் மட்டுமல்லாது பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முகம் காட்டியவர்.

கடைசியாக இவர் நடிப்பில் வந்த படம்  யுவர் ரத்தனா.   அடுத்து ஜேம்ஸ், த்வித்வா ஆகிய படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.  இந்நிலையில் இன்று காலையில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.   இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

 புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி,  காங்கிரஸ் பிரமுகர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு,  கேரளா,  கர்நாடக முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   மேலும் இந்தியாவெங்கிலும் உள்ள இந்திய திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.