ஆணவக்கொலை! வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!

 
krishnagiri murder

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரிர் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தண்டபாணியின் மகன் சுபாஷ் அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தண்டபானிக்கு தெரியவந்த நிலையில், அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறி வந்துள்ளார். 

இந்த நிலையில், தந்தையின் எதிர்ப்பையும் மீறி அந்த பெண்ணை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுபாஷ் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தனியாக வாழ்ந்த வந்த இருவரும் நேற்று சுபாஷின் சொந்த ஊரான  அருணபதி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது பாட்டியும், தண்டபானியின் தாயாருமான கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையறிந்த அங்கு சென்ற தண்டபாணி, சுபாஷ், மருமகள் அனுஷா, தாய் கண்ணம்மா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா இருவரும் உயிரிழந்தனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் தண்டபாணியை தேடி வருகின்றனர்.