வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்!
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மர்ம நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - ஓசூர் சாலையில் கோவை பாஜக தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அலுவலகம் உள்ளது .இங்கு நேற்று மாலை 5 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளார். வானதி சீனிவாசன் அலுவலகத்தின் உள்ளே புகுந்து தாழிட்டு கொள்ள முயன்ற நபரை அங்கிருந்த உதவியாளர் அடித்து விரட்டியுள்ளார். அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட இளைஞர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அந்த நபர் மது போதையில் இருந்தாரா? வாகன விபத்தில் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் , எனது அலுவலகத்திற்கு வந்த நபர் யார் என்றே தெரியவில்லை. அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தும்படி போலீஸிடம் புகார் அளித்துள்ளோம். அலுவலகத்திற்குள் புகுந்தவர் பின்னர் விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்ததால் புகார் அளிக்க தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.
வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞரை பாஜகவினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்து சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.