இரு கைகளை இழந்த மாணவனுக்கு முதல்வர் உதவிக்கரம்
கிருஷ்ணகிரியில் இரு கைகளை இழந்த மாணவனுக்கு முதல்வர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி அடுத்த ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி வர்மா (18). இவர், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறுவயதில் ஏற்பட்ட மின் விபத்தில், இவரது இரு கைகளும் முழங்கை அளவில் எடுக்கப்பட்டது. மேலும் இவரது இடது காலில் மூன்று விரல்கள் அகற்றபட்டன. தாயின் அரவணைப்பில் வளரும் இம்மாணவருக்கு கல்வியில் அதீத ஆர்வம் இருந்தது. கைகள் இல்லாத நிலையிலும் எழுதுவது, ஓவியம் வரைவதுடன், பள்ளியில் முதல் மாணவராக திகழ்ந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 437 மதிப்பெண்கள் பெற்றார். இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் நடிகர் விஜய் வரை அப்போது பாராட்டினர். நடப்பாண்டில், சொல்வதை எழுதுபவர் துணையுடன் தேர்வை சந்தித்த மாணவர், 600க்கு, 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து அந்த மாணவன் நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு சிறு வயதிலிருந்தே படிப்பில் தீராத ஆசை உண்டு. தற்போது பிளஸ் 2 வகுப்பில் கணிதம், உயரியல், வேதியியல் பாடப்பிரிவில, 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனக்கு பி.இ., ரோபோடிக்ஸ் படிக்க ஆசை. அதற்கு எனக்கு கைகள் மீண்டும் கிடைக்கும் வகையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பத்தாவது படித்தபோதே பலர் என்னிடம் இது குறித்து பேசினர். எனக்கு, 18 வயது ஆனவுடன் ஆப்பரேஷன் மூலம் கைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர். எனவே என் கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். இந்த செய்தியை கவனித்த தமிழக முதல்வர், "கண்கலங்க வேண்டாம் தம்பி" மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூலம் உனக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும் என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
கண்ணீர் வேண்டாம் தம்பி!
— M.K.Stalin (@mkstalin) May 8, 2025
மாண்புமிகு @Subramanian_ma அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். https://t.co/uqKXnLmY8S
தகவலறிந்து மாணவரின் வீட்டிற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், அவருக்கு வாழ்த்து தெரிவித்து, என்ன லேப்டாப் பிடிக்கிறதோ கேள் வாங்கி தருகிறேன் என்றார். உயர்கல்விக்கும் உதவி செய்யப்படும். மேலும், உன் கைகளை சீரமைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய சுகாதார அலுவலர்கள் வந்துள்ளனர். தமிழக அரசு துணையோடு, உன் கைகளும் சீரமைக்கப்படும்,” என்றார். தி.மு.க., மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகனை சந்தித்த மாணவன், கைகளை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் மாணவனுக்கு திருக்குறள் புத்தகத்துடன் ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவரின் தாயை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை சென்னைக்கு வருமாறும், சிகிச்சையை அங்கேயே அளித்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.


