என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி மீது பாய்ந்த பரபரப்பு வழக்குகள்
சென்னை மாதவரம் அருகே ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூர் திருவேங்கடம் சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆடு தொட்டி அருகே சென்றபோது போலீசாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். அவரை இன்று அதிகாலை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

இந்நிலையில் சென்னை மாதவரம் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், போலீசாரை தாக்க முயன்றதாகவும் கூறி புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் போலீசாரை தாக்கி திருவேங்கடம் தப்பி சென்ற சம்பவத்தில் மாதவரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலில் இருக்கும் போது தப்பி செல்லுதல், அரசு ஊழியரை தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடதக்கது.


