13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. இனி மகளிர் விடுதிகளில் பெண் போலீஸ் காவல் - அமைச்சர் கீதா ஜீவன்
பெண் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் பெண் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தற்போது உதவி தேவைப்படும் நிலையில் உள்ள குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த இல்லத்தில் படித்துவந்த 13 வயது சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை முயற்சி நேர்ந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு காலில் அடிபட்டு இருக்கிறது தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய தாய், அந்தக் குழந்தைகளுடைய பெயரையும், மாவட்டத்தையும் சொல்லிவிட வேண்டாம் என்று வேதனையோடு குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது அங்க இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் சோதனைப்பட்டு அங்கு இருக்கக்கூடிய காவலாளி கைது செய்து இருக்கிறார்கள் காவல்துறையினர். அவர் மீதும் எஃப் ஐ ஆர் போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு எதிராக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிராக ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். தற்போது மூன்று பெண் காவலர்களை அங்கு பணியில் நியமிக்க ஆட்சியாளரிடம் தெரிவித்திருக்கிறோம். அந்தப் பெண் குழந்தை இந்தக் காப்பகத்திற்கு வந்து ஐந்து நாட்களாகத்தான் ஆகிறது. வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடைபெற்ற இந்த சம்பவம் என்பது துரதிஷ்டவசமானது. அதனால் தான் பெண் காவலர்களை அங்கு நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
பெண்கள்கள் இருக்க கூடிய இடங்களில் பெண் காவலர்களை தான் நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். எல்லா பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள், தனியார் காப்பகங்களிலும் காவலர்கள் நியமிக்கப்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 123 பிள்ளைகளிடம் விசாரனை நடத்தி உள்ளோம் இதனை எந்த புகார் முன்பு இல்லை, இதுதான் முதல் நிகழ்வு” என்று தெரிவித்தார்.


