கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதித்தால், தியேட்டர்களுக்கு சீல் - ஆட்சியர் எச்சரிக்கை..
புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதால், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளை தீவிரப்படுத்தியுள்ளன. விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை, வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல் என அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ சங்கங்கள், திரையரங்குகளின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர் என பலர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும், நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை கட்டாயமாக்க வேண்உம் எனவும் ஆட்சியர் கூறினார்.
மேலும் , கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது எனவும், மீறி அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், பணியின் போது முகக்கவசம் அணியாத அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.