குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை : அமைச்சர் உதயநிதி..!

 
1

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: "வேகமாக நகரமயமாகும் மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை இன்றைக்கு விரிவடைந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், சென்னையின் மக்கள்தொகையும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சிக்கேற்ப சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேம்பாலப் பணிகள் திராவிட மாடல் ஆட்சியில் முழு வேகம் எடுத்துள்ளன. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பெற்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கான திட்டங்களை தமிழக முதல்வர் பார்த்துபார்த்து செய்து கொண்டிருக்கிறார். 

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் அண்மையில் ஏற்பட்டதைப் போல ஒரு மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அந்த சமயத்தில், கிட்டத்தட்ட பத்து, பதினைந்து நாட்கள் சென்னை முடங்கிப் போனது. ஆனால், இந்தமுறை பெய்த மழையில் இருந்து இரண்டே நாட்களில் நாம் மீண்டுவர சென்னை மாநகராட்சி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மாநகராட்சிப் பணியாளர்களின் பங்குதான் மிக முக்கிய காரணமாக இருந்தது." இவ்வாறு அவர் பேசினார்.