உயர்நீதிமன்ற சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளது; போராட்டம் முன்னெடுப்போம் - திருமாவளவன்
நீதிமன்றத்தில் காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது உள்நோக்கம் கொண்ட சுற்றறிக்கை என்று விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உயர்நிதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இரு தலைவர்களின் படங்கள் மட்டுமே நீதிமன்ற வளாகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்கள். இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையாக இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை அல்லது இந்த ஆணையை உயர்நீதிமன்றம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.